முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மதுக்கடைகளை கொண்டு வந்ததற்கு கருணாநிதி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

சிதம்பரம்: மதுக்கடைகளை கொண்டு வந்ததற்கு கருணாநிதி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 41 பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: மதுவை குடிப்பதற்கு விஷத்தை குடிக்கலாம் என திருவாரூரில் கருணாநிதி பேசியுள்ளார். 1971-ல் ராஜாஜி வலியுறுத்தியதையும் மீறி மதுக்கடைகளை திறந்ததை கருணாநிதி மறந்துவிட்டு பேசுகிறாரா? மூன்று தலைமுறை மக்களை நாசமாக்கிய கருணாநிதிக்கு மதுஒழிப்பு பற்றி பேச தகுதி கிடையாது. அவர் மதுவை கொண்டு வந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பாமக தொடக்கத்திலிருந்தே பூரண மதுவிலக்கை கொண்டு வரும் என மருத்துவர் ராமதாஸ் கூறி வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது மதுவிலக்கு கொண்டு வருவோம் எனக்கூறுவதே பாமகவின் முதல் வெற்றியாகும். கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத ஜெயலலிதா தற்போது படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார். யாரும் அதை நம்ப மாட்டார்கள். மதுவிலக்கை அன்புமணியால் மட்டும்தான் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

Advertisement

எனக்கு பதவி ஆசை கிடையாது. முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையும் கிடையாது. 35 வயதிலேயே நான் பதவிகளை பார்த்தவன். எனது நோக்கம் நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் உள்ள லஞ்ச, ஊழல்கள் குறித்து மற்ற அரசியல் கட்சிகள் கிணற்று தவளையாக உள்ளன. எனக்கு வசனம் பேசத்தெரியாது, நடிக்க தெரியாது. பொய் சொல்லி திராவிட கட்சிகள் இரண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தப்பு நடைபெறுவதை மக்கள் சகித்து கொள்வதால் 50 ஆண்டுகளாக இருகட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அடுத்து அன்புமணிதான் வர வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். 50 ஆண்டுகளுக்கு செய்ய முடியாத பல நல்ல திட்டங்களை 2 ஆண்டுகளில் நான் செயல்படுத்துவேன்.

தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் வர வேண்டும். இல்லையெனில் கடவுளே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. 50 ஆண்டுகளாக செய்ய முடியாததையா இனிமேல் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக்கட்சிகள் செய்யப் போகிறார்கள். எனவே நல்ல முடிவு எடுத்து எனக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள் என்று அன்புமணி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments