முகப்பு
தமிழ்நாடு

வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

சிதம்பரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அதிமுக, திமுக என மாற்றி, மாற்றி வாக்களித்து வெறுத்து போன மக்கள், இந்த முறை மாற்று காட்சியாக உள்ள எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். ஊடக பலம், பணபலம் கொண்ட அதிமுக, திமுகவிற்கு மாற்றாக உள்ள மக்கள் நல கூட்டணி மக்கள் பலத்தை நம்பி உள்ளது. மெளன அலை வீசுகிறது, இது மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஏப்.29-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகள் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் கோடி கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு ஒன்று, இரண்டு இடங்களில் மட்டும் தற்போது பணத்தை கைப்பற்றியுள்ளனர். எந்த அளவிற்க்கு அதிமுக மக்களை விலைக்கு வாங்கும் சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்றாக உள்ளது.

Advertisement

கோவில் பட்டி தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை என வைகோ அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இந்த முடிவை வைகோ அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் அவர் கோவில்பட்டியிலே போட்டியிடவேண்டும். மக்கள் நல கூட்டணியை அரும்பாடுபட்டு உருவாக்கியவர், அதில் தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்த்து அதை மெகா கூட்டணியாக மாற்றியவர் வைகோ. இந்த கூட்டணி நீடிக்காது, நிலைக்காது என்று சொன்னவர்கள் மத்தியில் இதனை வழிநடத்தியவர் இன்று கோவில்பட்டி தொகுதியில் அவர் போட்டியிடவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

வைகோ வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாதவர். ஆனால் தோல்வியை கண்டு பின்வாங்குகிறார் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைகின்றனர். ஒரு சமூகம் நல்லிணக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும் சாதியின் பெயரால் மக்கள் மோதிக் கொள்ளக்கூடாது என்கிற அடிப்படையில் தான் போட்டியிடவில்லை என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வைகோ சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments