நெல்லையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.
திருநெல்வேலி: வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.
வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 180 வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 2 தினங்கள் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென என முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் கே. ராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை மூத்த வழக்குரைஞர் ராஜாசிங் தொடக்கி வைத்தார். சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், பொருளாளர் சிவசங்கரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் அருணாசலம் (செங்கோட்டை), இராவணசிவன் (வள்ளியூர்), செல்லத்துரை (நான்குனேரி), குமார் (தென்காசி), செவ்வகுமார் (சிவகிரி), ஆழ்வார்சாமி (சங்கரன்கோவில்), அசோக்குமார் (சேரன்மகாதேவி) மற்றும் வழக்குரைஞர்கள் கே. ஜெயபாலன், குற்றாலநாதன், பிரபாகரன், பார்வதி, லட்சுமி, கந்தசாமி உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையொட்டி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.