கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் தீர்த்தவாரி உற்சவம் முடிவடைந்துவிட்டதால், இன்று கும்பகோணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
எனினும், மகாமகக் குளத்தில் இன்றும் ஏராளமானோர் நீராடினர்.
திருவிழா நடைபெற்ற கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடங்கியது.
கும்பகோணம் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது.மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரியாற்றில் நீராடிச் செல்பவர்கள் திருவிழா நடைபெறும் 12 சிவத் தலங்கள், 5 வைணவத் தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகப் பெருவிழாவில் பங்கேற்றுள்ளதால், கோயில்களில் தற்போதுள்ள உண்டியல்களைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் தாற்காலிகமாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்களின் மூலம் கிடைத்தத் தொகை எவ்வளவு என்பதை கணக்கீடுவதற்காக அருள்மிகு நாகேசுவரன், அபிமுகேசுவரர், ஆதி கும்பேசுவரர் உள்ளிட்ட சிவத்தலங்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடங்கியது. ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வையில் ஒவ்வொரு கோயிலிலும் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மதாமகப் பெருவிழா மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பது ஓரிரு நாள்களில் தெரிய வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.