முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே நின்ற சுமை ஆட்டோ மீது லாரி மோதியது: தாய், மகன் சாவு

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரமாக நின்ற சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் தாய், மகன் இறந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரமாக நின்ற சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் தாய், மகன் இறந்தனர். 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கடையம் அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் உலகநாதன் (38) ஓட்டுநர். இவரது மனைவி மார்த்தாண்டத்தை சேர்ந்த தீபா (35). நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தீபாவின் உறவினரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக உலகநாதன், தனது தந்தை சண்முகம், தாயார் காமாட்சி (70) மற்றும் உறவினர்களுடன் சுமை ஆட்டோவில் சென்றாராம்.

திருநெல்வேலி அருகே ஆயன்குளத்தில் பிரதான சாலையில் சாலையோரமாக சுமை ஆட்டோவை நிறுத்தி விட்டு சிலர் சிறுநீர் கழிப்பதற்காக சென்றனராம். அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் லாரி சுமை ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் சுமை ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் அதில் அமர்ந்திருந்த உலகநாதன், அவரது தாயார் காமாட்சி உள்ளிட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி காமாட்சி, உலகநாதன் ஆகியோர் இறந்தனர்.

பலத்த காயமடைந்த உலகநாதனின் தந்தை சண்முகம் (73), அவரது மனைவி தீபா (35), அவரது சகோதரி மகன் ஹரிஹரசுதன் (10), கலைச்செல்வி (8) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கர்ப்பமடைந்திருந்த தீபாவுக்கு கருச் சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →