போதை சாக்லெட் விற்பனை?: நெல்லையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
ிருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காலவதியான தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை படேல்நகர் பகுதியில் போதை பொருள் கலந்த சாக்லெட் சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அமுதா உத்தரவின்பேரில் புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் உள்ளிட்ட மாநகரப் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இயங்கி வரும் கடைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், காளிமுத்து, முத்துக்குமார், ரமேஷ் அடங்கிய குழுவினர் சோதனையிட்டனர்.
அப்போது உணவுப் பாதுகாப்பு அலுவலர் கூறியது: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கி வரும் கடைகளில் போதைப் பொருட்கள் கலந்த சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனையிடப்பட்டது.
அப்போது, செயற்கை நிரம்பிகள் கலந்த தரமற்ற தின் பண்டங்கள், காலவதியான குளிர்பானங்கள், விற்பனைத் தகவல்கள் இல்லாத லேபில் ஒட்டப்படாத பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. டீக் கடைகளில் பயன்படுத்தும் தேயிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.