இலுப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில் இலுப்பூர் பேருட்சிக்குட்பட்ட நவம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், அவ்வப்போது வரும் குடிநீரும் போதிய அளவில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில், நவம்பட்டி பிரிவு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த, இலுப்பூர் வட்டாட்சியர் எஸ். பி. மனோகரன், பேருராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டதில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.