இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: வாலிபர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்றொருவர் புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள குறிச்சிப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மகன் மணிகண்டன்(எ) வேல்முருகன்(41), அய்யாக்கண்னு மகன் பழனிச்சாமி(40). இருவரும் செவ்வாய்கிழமை இரவு இருசக்கரவாகனத்தில் அன்னவாசலில் இருந்து இலுப்பூர் சென்று கொண்டிருந்தனர். வண்டியை மணிகண்டன் ஓட்டிச்சென்றார்.
வீரப்பட்டி தர்ஹா அருகே வந்த போது, மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டைக்கு கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி ஆபத்தான நிலையில் புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அன்னவாசல் போலிஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.