மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்குப் பதில் பணநாயகமே வெற்றி பெற்றுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.
ராமதாஸ்: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் எதிர்பார்த்தவாறே அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் மே மாதம் அதிமுக, திமுகவினர் நடத்திய முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் இரு கட்சிகளுக்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு பதிலாக பணநாயகம் வெற்றி பெறுவதை, எதிர்த்துப் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஜி.கே.வாசன்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும், தற்போது 3 தொகுதிகளுக்கான தேர்தலிலும் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தியதா என்பது கேள்விக்குரியது.
3 தொகுதிகளுக்கான தேர்தலில் ஆள் பலம், பண பலம் போன்ற காரணங்களால் ஆளும்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தோம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக 3 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. வாக்குகளின் மூலம் மக்கள் தங்கள் தொகுதிக்கு யாரை சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.