மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் கொள்கை முடிவுகளை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் திங்கள்கிழமை (அக்.24) விவாதிக்கப்பட்டது.
நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அவரது தலைமையில் இரண்டாவது முறையாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கி 6.15 மணி வரை நீடித்தது.
இந்தக் கூட்டத்தில் தேசியக் கொள்கை குறித்தும் அதன் விளைவுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய கல்விக் கொள்கையில் மாநில அரசின் சார்பில் என்னென்ன மாற்றங்களை வலியுறுத்துவது ஆகியன தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகத்தின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய கொள்கை நிலைப்பாடுகள், ஜி.எஸ்.டி. விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் இன்று கூட்டம்: தேசியக் கல்வி கொள்கை தொடர்பாக, தில்லியில் மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.