சென்னை: பக்கிங்காம் கால்வாயை தூர்வார தமிழக பொதுப் பணித் துறைக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பக்கிங்காம் கால்வாயை தூர்வார உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப் பணித் துறை அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், சென்னையில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க ரூ.6.3 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ.3.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகளில் இருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பருவ மழைக்கு முன்பாக முடிந்த அளவுக்கு பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும்படி தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, வண்டல் மண்களை அப்புறப்படுத்தி, உடனடியாக தூர்வாரும்படி, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.