நாமக்கல் மண்டலத்தில் ஏறத்தாழ 45 லட்சம் வயது முதிர்ந்த கோழிகளால் தினமும் 36 லட்சம் தரமற்ற முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் தரமான முட்டைக்கும் மைனஸ் விலைக்கு விற்க வேண்டியுள்ளதாக பண்ணையாளர்கள் சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முட்டை உற்பத்தி நாடு முழுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஹைதராபாத், ஹோஸ்பேட் விஜயவாடா, நாமக்கல், பர்வாலா உள்ளிட்ட பெரும்பாலான உற்பத்தி மையங்களில் நிகழாண்டில் 10 முதல் 20 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 4.76 கோடியாக இருந்த முட்டைக் கோழிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 4.63 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், முட்டை உற்பத்தி குறைந்து கடந்த 8 மாதங்களில் முட்டையின் சராசரி விலை ரூ.3.82 என்ற நிலையில் உள்ளது. முட்டை விலை பெரிய அளவில் குறையவில்லை என்பதால், நிகழாண்டில் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
நாமக்கல் உள்ளிட்ட சில மண்டலங்களில் முட்டை உற்பத்தி குறைந்ததால், சென்னை, பெங்களூரு, மும்பை, புது தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட விற்பனை மையங்களில் முட்டைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு மண்டலங்களிலும் முட்டை விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. பெரும்பாலான மண்டலங்களில் முட்டைக்கான மைனஸ் விலை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலையும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலைக்கும் பெரிய வித்தியாசமில்லாமல் இருக்கிறது. ஆனால், நாமக்கல் மண்டலத்தில் இந்த வித்தியாசம் சற்று அதிகமாக இருக்கிறது. இப்போதைய நிலையில்
25 காசு வரை மைனஸ் விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17-ஆவது வாரத்தில் இருந்து 72-ஆவது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாள்களில்) 320 முட்டைகள் வரை இடும். சராசரியாக முட்டையிடும் பருவம் முடிந்து உரிய காலத்தில் இறைச்சிக்காக பிடிக்கப்படாத வயது முதிர்ந்த கோழிகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் ஓடு சற்று தரம் குறைவாக இருப்பதால், அதிக மைனஸ் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இந்த மண்டல பண்ணையாளர்களுக்கு உள்ளது.
இவ்வாறு உரிய காலத்தில் இறைச்சிக்காக பிடிக்கப்படாத வயது முதிர்ந்த கோழிகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அதிக மைனஸ் விலைக்கு வாங்கும் வியாபாரிகள், நல்ல தரமான கோழி முட்டைகளையும் அதிக மைனஸ் விலைக்குக் கேட்டு மொத்த வியாபாரத்தையும் அதிக மைனஸ் விலைக்கு வாங்குவதாக பண்ணையாளர்கள் சிலர் ஆதங்கம் தெரிவித்தனர். இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் பி.செல்வராஜ் தெரிவித்தது:
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 45 லட்சம் வயது முதிர்ந்த கோழிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளன. இவை உரிய காலத்தில் பிடிக்கப்பட்டால், அதன்மூலம் சுமார் 36 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறையும்.
இந்த உற்பத்திக் குறைவு, முட்டை விலை உயர வழி செய்வதோடு மட்டுமல்லாமல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலையிலிருந்து அதிகபட்சம் 15 பைசா மட்டுமே குறைத்து விற்று, பண்ணையாளர்கள் அதிக லாபம் பெற வழி ஏற்படும். மேலும், இந்த 45 லட்சம் கோழிகளுக்கான தீவனத் தேவையும் குறைவதால், இருக்கும் மீதிக் கோழிகளுக்கும் தடையின்றி மூலப் பொருள்கள் கிடைக்கும். தீவன விலை ஏற்றமும் தடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.