பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை 15 தினங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்தாமல், 2 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மாநில அளவில் முதல்வர் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இருக்கிறதா என்பதே தமிழகத்தைப் பொருத்தவரையில் கேள்விக்குறியாக இருக்கிறது.
இயற்கை பேரிடர்களைச் சமாளிக்க, "தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்-2016' ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டம் இன்னும் தயாரிக்கப்படாதது கண்டனத்துக்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.