சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையும், அரசையும் நிர்வாகம் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், அரசியல் சட்ட குழப்பங்களையும் நிர்வாக ரீதியிலான நெருக்கடிகளையும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உருவாக்கி வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
சட்டப்பேரவை உரிமை மீறல் பிரச்சினை பற்றி முடிவு எடுப்பது, பேரவைத் தலைவரின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அவ்வாறு பேரவைத் தலைவருக்கு உரிய அதிகாரங்களுக்குள்ளும் ஆளுநர் தலையிடுவதும், நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் செயலாகும்.
இதை ஒருவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அதற்கு எவ்வித அரசியல் சட்ட அங்கீகாரமும் இல்லை. நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையுள்ளவர்.
எனவே, நியமிக்கப்பட்டவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை ஆளுநர் கிரண்பேடி உணர்ந்து, புதுச்சேரி மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.