புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே திங்கள்கிழமை சரக்கு வேனில் திருமணத்துக்குச் சென்றுவிட்டு திரும்பியவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 5 பேர் இறந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் தாழம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் ஒரு சரக்கு வேனில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள், கந்தர்வகோட்டை அருகேயுள்ள புதுநகர் விளக்கு சாலை பகுதியில் சென்றபோது, குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த டிராக்டர் வேன் மீது மோதியது.
இதில், வேனில் இருந்த தாழம்பட்டி ராஜேந்திரன் மகன் கவியரசன் (15), ரெங்கராஜ் மகன் மகேந்திரன் (15), அடைக்கலம் மகன் மாரிமுத்து (30), கலியபெருமாள் மகன் ராமராஜ் (35), கோவை மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (22) ஆகிய 5 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
கந்தர்வகோட்டை போலீஸார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 5-க்கும் அதிகமானோரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.