சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 289 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.
இதுகுறித்த விவரம்: தமிழகக் காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாகப் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள், காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2017-ஆம் ஆண்டுக்கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகரக் காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 106 காவலர்கள், போக்குவரத்துக் காவலில் பணிபுரியும் 86 காவலர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 69 காவலர்கள், சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 28 காவலர்கள் என மொத்தம் 289 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 289 காவலர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் கரண் சின்கா முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
சென்னை பெருநகரக் காவல் கூடுதல் ஆணையர்கள் அபய்குமார் சிங், பி.தாமரைக்கண்ணன், எஸ்.என்.சேஷசாயி, சங்கர், எச்.எம்.ஜெயராம், எம்.டி.கணேசமூர்த்தி, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.