புதுச்சேரி மாநிலம் முழுவதையும் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதால் அதை அரசு ஏற்றுக் கொண்டது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் முறையை முதல்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதயப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் 5 முக்கிய நகரங்களில் மே மாதம் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு நடைமுறை படுத்த உள்ளது.
புதுச்சேரியில் மே 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஆரம்பத்தில் முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் புதுச்சேரி அரசு தற்போது அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சியில் மட்டுமே இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புதுச்சேரி முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வோம் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து நான் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் பேசினேன். அவர் இந்த திட்டத்தை புதுச்சேரி முழுவதும் செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த உள்ளன. அதனால் மாநில அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.