முகப்பு
தமிழ்நாடு

சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையரானார்?டிடிவி தினகரன்

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையரானார் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:


தஞ்சாவூர்: அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையரானார் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக தலைமைக் கழகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி தினகரனின் உத்தரவுகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலராக நான் செயல்பட கட்சியின் சட்ட திட்டங்களின்படி அதிகாரம் உண்டு. புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும், சரியாக செயல்படாதவர்களை நீக்கவும் அதிகாரம் உண்டு.

சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் பழனிசாமி. அவர் எப்போது தேர்தல் ஆணையரனார்?

நான் கட்சியை வலுப்படுத்தவும், பொதுமக்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர்கள் பயத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

ஒருவேளை நாங்கள்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் பழனிசாமி முதல்வர் பதவியை இழக்க நேரிடும்.   கட்சியின் சட்ட திட்ட விதிகளை தவறாக திரித்துக்கூறுகிறார்கள். 

தீர்மானத்தில் அதிமுக எனக் குறிப்பிடப்பட்டிருப்பதே தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது. 

பொதுச் செயலராக இருக்கும் சசகிலா உத்தரவிட்டதால்தான் பொருளாளரான திண்டுககல் சீனிவாசன் வங்கிக் கணக்கில் உள்ள கட்சிப் பணத்தை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு அவரால் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட எனது நியமனம் எவ்வாறு செல்லாது என்று கூற முடியும்?

சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர் செய்த நியமனங்களும் செல்லும் என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பழனிசாமி அணி என்று எதுவும் இல்லை அம்மா அணி தான் உள்ளது என்று பதிலளித்தார்.

மடியில் கனம் இருப்பதால் அமைச்சர்கள் சிலர் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்கள்தான் நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →