செங்கல்பட்டு அருகே வீட்டில் ஆள் இருந்தபோதே, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 70 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
செங்கல்பட்டை அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (65). ஓய்வுபெற்ற ஆசிரியர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு கன்னியப்பன் குடும்பத்தினர் அசந்து தூங்கிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்துபார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 70 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கன்னியப்பன் செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, செங்கல்பட்டு டி.எஸ்.பி. மதிவாணன், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.