முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் திருந்தி மீண்டும் வரவேண்டும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் வந்து சேரவேண்டும் என அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் வந்து சேரவேண்டும் என அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோரை வெற்றி பெறச் செய்யும் வரை ஓய்வு, உறக்கமின்றி உழைக்க வேண்டியுள்ளது.
மதுரை மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டத்தை பார்த்து கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் வரவேண்டும். இல்லாவிடில் அவர்கள் திருத்தப்படுவார்கள் என்றார்.
பரபரப்பு: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டி.டி.வி. தினகரன் சுவாமி தரிசனம் செய்த அதே நேரத்தில் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கமும் அங்கு வந்தார். அவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவாமி தரிசனத்துக்கு வந்ததாகவும், டி.டி.வி. தினகரனை சந்திக்கும் எண்ணமில்லை என்றும் கூறினார்.
அடுத்த கூட்டம்: இதற்கிடையே அதிமுக அம்மா அணி தலைமைக் கழகப் பேச்சாளர் புகழேந்தி மதுரையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாக கூடியுள்ளனர். பணம் கொடுத்து யாரையும் வரவழைக்கவில்லை.
தொடர்ந்து சென்னையில் வரும் 23-ம் தேதியும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரும் 29-ம் தேதியும் அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளன என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →