தமிழ்நாடு

திட்டமிட்டபடி ஆக.22 -இல் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

DIN

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.
'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதியக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும்' ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 -ஆம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். பல்வேறு தடைகளைக் கடந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தனர்.
இதற்குப் பிறகாவது எங்களுடன்அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என காத்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ஆம் தேதி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். இதற்காக கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்களைச் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறோம்.
மேலும் அடையாள வேலை நிறுத்தத்தின்போது, அனைத்து தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சணக்கான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன் பின்னரும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 7 -ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT