சென்னை: சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4.6 கோடி மதிப்புள்ள 16.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பை சோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்த பையில் 4.6 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் அந்த பையை வைத்துச் சென்றவர் யார் என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், விமான நிலைய டிராலி ஓட்டுநர் குமார் என்பவர் விமானத்தில் இருந்து அந்த பையை இறக்கியதும், அதிகாரிகளின் சோதனையை தவிர்ப்பதற்காக பையை ஓடுதளத்தில் விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குமாரை கைது செய்த சுங்க அதிகாரிகள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.