காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தெற்கு ஆந்திர கடற்கரையிலிருந்து கன்னியாகுமரி கடல்பகுதி வரை, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
தூத்துக்குடியில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் மட்டும் 100 டிகிரி வெயில் பதிவானது.
மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 70 மி.மீ., சென்னை சத்யபாமா பல்கலைக்கழகப் பகுதி, பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 50 மி.மீ., கேளம்பாக்கம், வால்பாறையில் தலா 40 மி.மீ., மழை பதிவானது. காவேரிப்பாக்கம், தேவாலா, பூந்தமல்லி, சிதம்பரம், பொன்னேரி, மகாபலிபுரம், எண்ணூர், கடலூர், சென்னை, சின்னக்கல்லாறு, விழுப்புரம், நடுவட்டம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.