தமிழ்நாடு

நீலகிரி சுற்றுலா மலை ரயிலுக்கு புதிய வகையிலான 15 ரயில் பெட்டிகள் !

DIN

உலகப் புகழ் பெற்ற நீலகிரி மலை ரயிலுக்கு 15 புதிய வகையிலான ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப். நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் தயாரித்து வழங்கவுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
109 ஆண்டுகள் பழைமையான நீலகிரி மலை ரயில் முதன்முறையாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட்டது. பின்பு, 9 ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது. 
அதன் பின் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஊட்டி ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. மேட்டுப்பளையம் - குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி எஞ்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன. இந்த ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரங்கள் உதவியுடன் ரயில் இயக்கப்படுகிறது. இப்போது, ஊட்டி - குன்னூர் இடையே டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 
இப்போதுள்ள நீலகிரி மலை ரயில் 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும், 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ.,) தூரம் கடக்க 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடக்க வேண்டியுள்ளது. நீலகிரி மலை ரயிலை, கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் உலகச் சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றது. 
ரூ.3 கோடி செலவில்: மலை சுற்றுலா ரயிலுக்குப் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரத்யேகப் பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரிக்க ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. இப்போது, வடிவமைப்பு பணிகள் முடிவடைந்தவிட்ட நிலையில், பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக ஐ.சி.எஃப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்டமாக 15 பெட்டிகளை ஐ.சி.எஃப். தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளது. நீலகிரி மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவதால், இதை உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பெட்டியாக தயாரிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
எப்படி இருக்கும் புதிய பெட்டி?: நீலகிரி மலை சுற்றுலா ரயிலின் பெட்டியின் உள்பகுதி மரத்தால் செய்யப்பட்ட பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப்பதற்காக எல்இடி திரைகள், வை-ஃபை வசதி, தேனீர், காபி வழங்கும் தானியங்கி இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும். இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகளில் வசதி செய்யப்பட்டிருக்கும். இந்தப் புதிய ரயில் பெட்டியின் மாதிரி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப். அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
இனி 5 பெட்டிகள்: நீலகிரி மலை ரயிலின், புதிய எஞ்ஜினில் 5 பெட்டிகளை இணைத்து, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. 
நீலகிரி மலை ரயில் ஃபர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் வகையில், 4 புதிய எஞ்ஜின்கள் திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டன. அவையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக மூன்று பெட்டிகளுடன்தான் நீலகிரி மலை ரயில் இயக்கப்படுவது வழக்கம். இப்போது, புதிய வகையிலான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் நிலையில் 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT