முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்? சூடு பிடிக்கும் மனு நிராகரிப்பு விவகாரம்! 

தேர்தல் அலுவலரை நான் மிரட்டியதால் எனது மனுவினை ஏற்றுக் கொண்டதாக என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 டிசம்பர், 2017 at 3:50 PM
பகிர்:

சென்னை: தேர்தல் அலுவலரை நான் மிரட்டியதால் எனது மனுவினை ஏற்றுக் கொண்டதாக என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாயன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடந்தது. அப்பொழுது நடிகர் விஷாலின் வேட்பு மனுவானது பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டதாக செவ்வாய் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

எனவே தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் புதன்கிழமை மாலை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.   

பின்னர் இன்று காலை தனது வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பாக தேர்தல் அலுவலர் வேலுசாமியினை நடிகர்  விஷால் சந்தித்துப் பேசலாம் என்று தேர்தல் ஆணைய செயலர் மாலிக் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து வியாழன் மதியம் தேர்தல் அலுவலர் வேலுசாமியினை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடிகர்  விஷால் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எனது மனுவினை முன்மொழிந்த இருவரைத் தேடி அவர்களது வீட்டில் ஆட்களை நிறுத்தியுள்ளோம். அவர்களைக் காணவில்லை. என்னால் அவர்களுக்கு எந்த  ஆபத்தும் நேரக் கூடாது என்பதுதான் எனது கவலை.

எனது மனுவினை முன்மொழிந்தவர்களை ஆஜர்படுத்தி விளக்கமளித்தால் மனு மறுபரிசீலனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் வேலுசாமி அவர்களை சந்தித்த பொழுது அபப்டி எதுவும் தகவல் இல்லை என்று என்னிடம் மறுப்புத் தெரிவிக்கிறார்.

அத்துடன் ஏன் முதலில் எனது மனுவினை ஏற்பதாக அறிவித்து பின்னர் 2.30 மணி நேரம் கழித்து தள்ளுபடி செய்வதாக அறிவித்தீர்கள் என்று கேட்டால், நான் மிரட்டியதால் அப்படி கூறியதாகச் சொல்கிறார். அரசு கேமரா மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் நான் அப்படிச் செய்ய இயலுமா? 

கண்டிப்பாக இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இதை நான் தற்பொழுது மக்கள் மன்றத்தின் முன் வைக்கிறேன்.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.