தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலை ஏற்றிச் சென்ற 2 லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்தது. மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுசெல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மணலை கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை துறைமுகப் புறவழிச் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறைமுகத்திலிருந்து சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், ஒரு டாரஸ் லாரியில் 25 டன்னும், மற்றொரு லாரியில் 12 டன்னும் மணல் இருந்ததும், அது மலேசியாவிலிருந்து இறக்குமதியான மணல் என்பதும் தெரிய வந்தது. 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, தெர்மல் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர்.
மலேசிய மணல் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், மலேசிய மணலை லாரிகளில் கொண்டு செல்ல அனுமதியில்லை என, லாரி ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனராம்.