காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதர் குடும்பத்தினரின் ரூ.21.37 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே உள்ள எல்லப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபாலன் (43). இவர் மீது 9 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், 3 வெடிகுண்டு வழக்குகள் என மொத்தம் 38 வழக்குகள் உள்ளன.
சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஸ்ரீதர், தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை கொலையும் செய்தார். இதற்கிடையே காவல் துறையினர், ஸ்ரீதருக்கு கொடுத்த நெருக்கடியின் காரணமாக வெளிநாடுக்குத் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை தேடுப்படும் குற்றவாளியாக காவல் துறை அண்மையில் அறிவித்தது. மேலும் சர்வதேச போலீஸின் உதவியுடன் ஸ்ரீதரை பிடிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீதர், அவரது மனைவி குமாரி, மகள் தனலட்சுமி, சகோதரர் செந்தில் ஆகியோர் பெயரில் இருந்த ரூ.150 கோடி மதிப்புள்ள 124 சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த செப்டம்பர் மாதம் முடக்கியது.
இதற்கிடையே, ஸ்ரீதரின் சமூக விரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது சகோதரர் செந்திலை அமலாக்கத் துறை கடந்த மாதம் கைது செய்தது.
ரூ21.37 கோடி சொத்து முடக்கம்: இந்நிலையில், அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்ரீதர் மனைவி குமாரி, சகோதரர் செந்தில், செந்திலின் மனைவி நிர்மலா, அவரது கூட்டாளி அருள் ஆகியோர் பெயரிலும் பல கோடி மதிப்புள்ள மேலும் பல சொத்துகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அமலாக்கத் துறையினர், குமாரி பெயரில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள விவசாய நிலம், செந்தில் பெயரிலான ரூ.2.84 கோடி மதிப்புள்ள 2 வீடுகள், செந்தில் மனைவி நிர்மலா மற்றும் அவரது குழந்தைகள் பெயரில் உள்ள ரூ.7.68 கோடி மதிப்பிலான விவசாய நிலம், கூட்டாளி அருள் பெயரில் உள்ள ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலம் என மொத்தம் ரூ.21.37 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது.