மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் குடும்பத்தினருடன் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொட்டாம்பட்டி அருகே திருச்சுனை விலக்கு அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரிலிருந்த ஜெயபிரகாஷ் மனைவி நிர்மலா (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கார் ஓட்டுநர் வினோத்குமார், ஜெயபிரகாஷ் உறவினர் ஜோஸ்அலசிஸ், இரு குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மேலூர், மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.