ஆளுநர் அவசரப்படக் கூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக இன்று பிளவுப்படுவதை பார்க்கும் கவலையளிக்கிறது.
ஆளுநர் அவரது வேலையை செய்கிறார். பாஜக எந்த விஷயத்துக்கும் தடை போடாது. பாஜகவின் விருப்பம் நல்ல ஆட்சி நடக்க வேண்டும். நல்ல ஆட்சி என்றால் கழகங்கள் இல்லாத ஆட்சி வர வேண்டும்.
ஆளுநர் அவசரப்படக்கூடாது. ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இது ஒரு கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தமிழகத்தின் தலையெழுத்து சம்பந்தப்பட்டது. எனவே அவசரப்பட தேவையில்லை. சட்டரீதியாக எல்லா விஷயங்களை பார்த்து முடிவு எடுக்க வேண்டும். இதில் தலையிட எந்த உரிமையும் அல்ல. யாரையும் பதவியேற்க கட்டாயப்படுத்தவில்லை. முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் என்றார்.
யாருக்கும் ஆதரவு இல்லை: முன்னதாக நடைபெற்ற தகவல் மற்றும் சமூக ஊடகப்பிரிவின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- கழகங்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு இதை விட சந்தர்ப்பம் கிடைக்காது. பாஜகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது. சரிசமமாக விமர்சனம் செய்யுங்கள். யாருக்கும் ஆதரவாக எழுதக் கூடாது. பாஜகவின் வளர்ச்சிக்கு எது சாதகமோ அதை செய்வோம். "கழகங்கள் இல்லாத தமிழகம், கவலையில்லாத தமிழர்கள்' என்பதை எல்லா இடத்தில் பேசவேண்டும்' என்றார்.
பதிலடி தர வேண்டும்: கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், "ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 50 பேர் கொண்ட தகவல் தொழில்நுட்பனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பாஜகவுக்கு எதிராக ஒரு கருத்து வந்தால், அடுத்த வினாடியே பதில் தர வேண்டும்' என்றார்.