உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், பா.ஜ.க அரசின் 3-ஆம் ஆண்டு சாதனைகள் மற்றும் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை தொடர்பாகவும், பாஜக சார்பில் சென்னை கே.கே.நகரில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவ்வப்போது அனுமதி வழங்கியதில் இருந்து, நிரந்தரமாக தடை விதித்தது வரை ஒவ்வொரு ஆண்டிலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறாமல் இருக்க அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டுச் சதியே காரணம். தற்போதுள்ள விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியினரால் நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக் காலம் இம்மாதத்தோடு முடிவடைகிறது. அதனால், இனிமேல் பாஜக மூலம் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. இந்த உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உச்ச நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வகையில், உரிய வாதங்கள் மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்படும். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. அதற்கான தகுதி பா.ஜ.க மட்டுமே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.