சென்னை: தமிழக விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வறட்சியினால் விவசாயம் நலிவடைந்ததன் காரணமாக 270-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கான நிவாரணத் திட்டத்தை ஜனவரி மாதம் 10-ஆம் தேதி முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
முதல்வர் அறிவித்த நிவாரண உதவி துயரங்களைத் தீர்க்கப் போதுமானது இல்லை என்றாலும், அந்த உதவி உடனடியாகக் கிடைத்தால் கடன் தொல்லை மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து ஓரளவாவது மீளலாம் என்று விவசாயிகள் எண்ணினர்.
ஆனால், நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு 34 நாள்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனும், அதற்கான வட்டியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகள் பலர் ஊரை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய ஆளும் கட்சியின் தலைவர்கள் அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தோன்றாத நிலையில், தமிழகத்திலுள்ள அதிகாரிகள் மூலம் மத்திய அரசே நேரடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.