அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காததன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளதாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
வேலூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தும் ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைக்காததன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப் போவதாக தீபா அறிவித்திருப்பதன் மூலம் காலம் இருவரையும் நிராகரிக்கும். கட்சியில் பொதுச் செயலாளரின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள ஏற்கெனவே கட்சியினரிடம் அறிமுகமான டி.டி.வி. தினகரன் துணை பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அந்தப் பதவிக்கு அவர் தகுதியானவர். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி விமர்சனம் செய்யும் இடத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.