சென்னை: போயஸ் இல்லத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலர் சசிகலா இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் நோக்கி புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலைக்குள் பெங்களூரு 48வது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார் என்று அவரது வழக்குரைஞர் குலசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலில் விமானம் மூலம் அவர் பெங்களூரு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் வாகனம் மூலம் சாலை வழியாகவே பெங்களூரு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சரணடைய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனால், சசிகலா பெங்களூரு செல்வது உறுதி செய்யப்படாமல் இருந்தது.
ஆனால், சசிகலா தரப்பில் கால அவகாசம் கேட்டு வாய்மொழியாக வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டதால், உடனடியாக அவர் பெங்களூருவுக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டது.
போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார்கள். பரப்பன அக்ரஹாரம் செல்ல சசிகலா தயாராகி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் அவர் புறப்படுவார் என்று கூறப்படுகிறது.