திமுகவினர் செய்த ரகளையால் தனது சட்டை கிழிக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவையில் சனிக்கிழமை வேதனை தெரிவித்தார்.
சட்டப்பேரவை முதல்முறை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. பேரவை தொடங்கியதும் அவைத் தலைவர் பி.தனபால் பேசியது: பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன. சாமானிய குடும்பத்தில் இருந்து வந்து, தற்போது இந்த அவையை நடத்துகிறேன். அவையை நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், எனது சட்டையைக் கிழித்து, பேரவைத் தலைவர் பதவியை அவமானப்படுத்துவது மோசமான விஷயமாகும். என்னை தனிப்பட்ட முறையில் பேசினால் நான் தாங்கிக் கொள்வேன். நீங்கள் வகுத்துக் கொடுத்த விதிகளின்படியே இந்த அவையை நடத்துகிறேன். ஆனால், நீங்கள் சொல்லும்படி அவையை நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள். விதிகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டுமா சொல்லுங்கள்? அப்படி செயல்படச் சொன்னால் அது முடியாது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.