நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப் பேரவைக்கான மாண்பை திமுக எம்எல்ஏக்கள் சீர்குலைத்துவிட்டனர் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
முறைப்படி நடைபெறாத வாக்கெடுப்பை ரத்து செய்யுமாறு திமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆளுநர் வித்யா சாகர் ராவைச் சந்தித்து புகார் அளித்ததற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நவநீதகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சட்டப்பேரவையில் ரகளை செய்து அமளியை உருவாக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்திவிட திமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டிருந்தது அவர்களது நடவடிக்கைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்வாயிலாக சட்டப்பேரவையின் மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், பேரவைத்தலைவரின் இருக்கைக்கு அவர்கள் சென்று, பணி செய்ய விடாமல் தடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. எனவே, தீர்மானம் முறைப்படி கொண்டுவரப்பட்டு, முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளில் எந்தவித விதிமீறலும் விதிமீறல் இல்லை. அவர்கள் ஆளுநரிடம் குறை கூறவோ, நீதிமன்றம் செல்லவோ எந்த முகாந்திரமும் இல்லை. திமுகவுக்கு துணை போன ஓ. பன்னீர்செல்வம் அணியினர், தங்களுக்கு இல்லாத ஒரு உரிமையை இருப்பதாக, ஏதோ தவறு நடந்ததாக கற்பனை செய்து ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர் என்றார்.