திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணைக் கைதியை, போலீஸார் தேடி வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூரைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22). கடந்த சில தினங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக, இவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மணிகண்டனை பிடித்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைவிலங்கிட்டனர்.
மாலை 4 மணிக்கு ஒரு காவலர் மட்டும் காவல் நிலையத்தில் பணியில் இருந்தாராம். அப்போது, திடீரென மணிகண்டன் கைவிலங்குடன் காவல் நிலைய சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து, தப்பியோடி விட்டாராம்.
இதுகுறித்து நான்குனேரி காவல் உதவிக் கண்காணிப்பாளர் சுகுணாசிங் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மணிகண்டனை போலீஸார் தேடி வருகின்றனர்.