அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 17 குழந்தைகள் உட்பட 33 பேர், அம்மை (சின்னம்மை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், ஆமணக்கந்தோண்டி ஊராட்சி கடாரங்கொண்டான் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக அம்மை நோய் பரவி வருகிறது.
கிராமத்தில் உள்ள காலனித்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 17 குழந்தைகள் உட்பட 33 பேருக்கு சின்னம்மை நோய் தாக்கியுள்ளது. செந்தில் (35), வெற்றிவேல் (11), பூர்ணிமா (14), தீபக் (9), மதி (9), ஆகாஷ் (8), இந்துமதி (10), சங்கீதா (33), பவதாரணி (6), அய்யப்பன் (20) உள்ளிட்ட 33 பேருக்கு அம்மை நோய் பரவியுள்ளது.
தகவலறிந்த சுகாதாரத் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் தலைமையில் கிராமத்தில் முகாமிட்டு அம்மை பாதித்தவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, தெருக்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.