புதுக்கோட்டை பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடி கடற்கரைப் பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 9 பேர் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை நாட்டுப்படகு மீனவர்கள் அப்படகைச் சுற்றி வளைத்து 9 மீனவர்களையும் தாக்கி சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனராம். மேலும் படகையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 22 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ராமேசுவரம் மீனவர்களைத் தாக்கியதைக் கண்டித்தும், சேதப்படுத்தப்பட்ட படகுக்கு இழப்பீடு வழங்கவும், கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் விடுதலை செய்யவும் வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ராமேசுவரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.