மதுரை: தமிழகமெங்கும் சீமைக்கருவேல மரங்களை நீக்க இரண்டு மாதங்களுக்குள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகமெங்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்கள் அதிக அளவு நீரை உறிஞ்சி நிலத்தடி நீர் குறைபாடு உண்டாக்குவதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நிறைய இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
தமிழகமெங்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று முன்னரே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த ஆணை சரியாக நிறைவேற்றப்படவில்லை. 10 முதல் 15 சதவீதம் வரையிலான பணிகள் மட்டுமே நிறைவேறியுள்ளதா கத் தெரிகிறது. இன்னும் சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பணியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வருகிறது. எனவே முன்பு பிறப்பித்துள்ள உத்தரவை இன்னும் 15 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.
மேலும் தமிழகமெங்கும் சீமைக்கருவேல மரங்களை நீக்க இரண்டு மாதங்களுக்குள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. இந்த சிறப்பு சட்டமானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது