மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்குரைஞர் கே.பாலு, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-
சொத்துக் குவிப்பு வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்தது. இந்த நிலையில், ஜெயலலிதா பெயரில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், அவரது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே, இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்குரைஞர் கே.பாலுவும், ஜெ.அன்பழகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும் ஆஜராகி, ’புகைப்படம் இடம்பெறுவதை அரசு நியாயப்படுத்த முடியாது' என்று வாதிட்டனர்.
இதையடுத்து, ’பொது இடங்கள், கட்சி அலுவலகங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படம் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இந்த வழக்கில் மனுதாரர்கள் எழுப்பியிருக்கும் விஷயத்துக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்துள்ளது. இதற்கு மார்ச் 20-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்றனர்.