மணப்பாடு படகு விபத்தில் காயமடைந்து திருநெல்வேலியில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு, தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த கவிதா, திலீபன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், ரஞ்சனி (18), சிவகார்த்திகா (17) ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த எஞ்சியுள்ள 6 பேர் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரைச் சந்தித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது அமைச்சர் கூறியது:
மணப்பாடு கடலில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் 10 பேர் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். துரித நடவடிக்கையாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்த 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்பட்டது. இதுபோன்ற விபத்துக்கள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
தூத்துக்குடி எஸ்.பி. கூறியது:
மணப்பாடு விபத்து குறித்து படகின் உரிமையாளர், படகை இயக்கியவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார் அவர். அமைச்சருடன், மாவட்ட ஆட்சியர்கள் மு. கருணாகரன் (திருநெல்வேலி), ம. ரவிக்குமார் (தூத்துக்குடி), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாப்புலர் வி. முத்தையா அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.