ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 500 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஒரு பிரச்னையை முன்னிறுத்தி நடைபெறும் போராட்டத்தில் இவ்வளவு பேர் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அன்று இரவு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விடுதலை செய்யக் கோரியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தை கல்லூரி மாணவர்களும்,இளைஞர்களும் நடத்த தொடங்கினர்.
பின்னர் மாநிலம் முழுவதும் போராட்டம் தொடங்கியது. பல பகுதிகளில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.