தமிழ்நாடு

சொத்துகளை விற்க விதித்த தடையை நீக்கக் கோரிய நடிகை ராதிகா மனு தள்ளுபடி: ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

DIN

கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதற்கு நடிகை ஆர்.ராதிகா சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்குச் செலவாக ரூ.2 லட்சத்தை நான்கு வாரத்துக்குள் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், நடிகர் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ஆம் ஆண்டு ராதிகாவும் சரத்குமாரும் ரூ.1.5 கோடி கடனாகப் பெற்றனர்.

இந்தத் தொகையை கடந்த 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால், பணத்தை கொடுக்காத நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமை அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் இருவரும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துகளை அடமானமாகக் கொடுத்திருந்தனர். ஆனால் உத்தரவாதத்தை மீறி பாம்பு சட்டை படத்தை வெளியிட்டுள்ளதால் தங்களுக்குத்தர வேண்டிய ரூபாயை வட்டியுடன் சேர்த்து ரூ.3.40 கோடி தர உத்தரவிடக் கோரியும், அடமானமாக வைத்த சொத்துகளை விற்பனை செய்யத் தடை விதிக்கக் கோரியும், ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

இந்த வழக்கை மே மாதத்தில் விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகை ராதிகா அடமானம் வைத்த சொத்துகளை விற்க இடைக்காலத் தடை விதித்து, இந்த மனு தொடர்பாக ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் ஜூன் 2-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தத் தடையை நீக்குவதோடு, சொத்துகளை விற்பனை செய்ய அனுமதி கோரி ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்குச் செலவாக ரூ. 2 லட்சத்தை ராடியன்ஸ் நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 15 அல்லது அதற்கு முன்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT