தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
கடந்த சில நாட்களாக கேரளத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்துவிட்டது. இதனால் காற்றின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட வானிலை நிலவுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கத்திரி வெயில் காலத்தைப் போன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்த நிலை மேலும் சில நாள்கள் நீடிக்கும்.
அதேவேளையில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவைவிட 2 லிருந்து 3 டிகிரி கூடுதலாக இருக்கும் என்றனர்.
12 இடங்களில் சதம்: தமிழகத்தில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவானது.
மழை: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 10 மி.மீ., மழை பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
மதுரை 107
திருச்சி 105
வேலூர், அதிராம்பட்டினம் 104
திருத்தணி, கரூர் பரமத்தி,
நாகை 103
பாளையங்கோட்டை,
கடலூர் 102
சேலம், பரங்கிப்பேட்டை 101
சென்னை 100
புதுவையில்..... புதுச்சேரியில் 103 டிகிரி, காரைக்காலில் 101 டிகிரி வெயில் பதிவானது.