பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 450 மையங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் தேர்வு பயத்தைப் போக்க தமிழகம் முழுவதும், 450 மையங்களில் சிறப்புப் பயிற்சி
திருவண்ணாமலை: பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் தேர்வு பயத்தைப் போக்க தமிழகம் முழுவதும், 450 மையங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளின் அச்சம், பயத்தைப் போக்க தமிழகம் முழுவதும் 450 மையங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். ரூ.1.27 கோடியில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி விபத்து காப்பீடுகள் வழங்கப்படும்.
தேர்வில் எளிதல் தேர்ச்சி பெறும் வகையில் 54 ஆயிரம் வினா-விடை தொகுப்புகள் விரைவில் வெளியிடப்படும். 11-ம் வகுப்புத் தேர்வு அச்சத்தைப் போக்க திங்கள்கிழமை (ஜூலை 31) உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, பாரதப் பிரதமரிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நல்ல முடிவை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார்.
10 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்:
தொடர்ந்து நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில், சென்னை கீழ்ப்பாக்கம் லைவ் லைப் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் அமைப்பின் நிறுவனரும், மருத்துவருமான கண்ணன் கிரீஷ் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் பேசி புத்தாக்கப் பயிற்சி அளித்தார்.
இதில் கலந்து கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் மருத்துவர் கண்ணன் கிரீஷின் பேச்சை கூர்ந்து கவனித்துப் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.