தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 90-ஆவது திருக்குறள் விழா வியாழக்கிழமை தொடங்கியது.
காலை 6 மணிக்கு முற்றோதுதல் வேள்வியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, தியாகி லக்குமிகாந்தன் பாரதி திருக்குறள் கொடியேற்றினார். அதையடுத்து முத்துசுவாமி குழுவினரின் மங்கல இசை நடைபெற்றது.
பின்னர், திருக்குறள் மறை - நகர்வலத்தை தியாகி லக்குமிகாந்தன் பாரதி தொடக்கி வைத்தார். பாவலர் குப்பன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் கழகம் முன் தொடங்கிய இந்த ஊர்வலம் நான்கு ரத வீதிகள் வழியே கோயில் முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, டி.எஸ். திருமலையப்பனின் திருக்குறள் பண்ணிசை நிகழ்ச்சி, 90-ஆவது ஆண்டு நிறைவு திருக்குறள் விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் தொடக்கவுரையாற்றினார். செயலர் ஆ. சிவராமகிருஷ்ணன் அறிமுகவுரையாற்றினார். ஸ்ரீசண்முகவடிவு, பிரியதர்சினி, தி. யானேஷ்வரராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்பிறை மணிமாறன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, கழகத் தலைவர் ச. கணபதிராமன் வரவேற்றார்.
மாலையில் நடைபெற்ற மங்கையர் அரங்கம் நிகழ்ச்சிக்கு இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தார். டாக்டர் ப. புனிதவதி தொடக்கவுரையாற்றினார். யதீஷ்வரி ஆத்மப்ரியா அம்பா வாழ்த்திப் பேசினார்.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற பொருளில், "கஸ்தூரிபாய்' என்ற தலைப்பில் க. திலகவதி, "வள்ளியம்மாள் வ.உ.சி.' என்ற தலைப்பில் க. சுப்புலட்சுமி, "சாரதாதேவியார் ராமகிருஷ்ணர்' என்ற தலைப்பில் சு. சந்திரா ஆகியோர் பேசினர். முன்னதாக, ச. சிவகாமி சுந்தரி வரவேற்றார்.