நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் இடத்தில் பொது சாலை, அஞ்சல் நிலையம் இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து, நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதாக கூறி, தியாகராயந கர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆய்வுக்கு பின் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 'சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் நிலையம் இருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் அஞ்சல் நிலையம், பொது சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, வழக்கில் தலைமை அஞ்சல் துறை தலைவரை எதிர்மனுதாரராக இணைத்து விசாரணையை வரும் 27 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையை பார்வையிட நடிகர்கள் நாசர், கார்த்திக், பசுபதி, பொன்வண்ணன், நடிகை சங்கீதா ஆகியோர் நேரில் வந்தனர். இவர்கள் வருகையை அறிந்த நீதிமன்ற ஊழியர்களும், வழக்குரைஞர்கள் பலரும் வழக்கு நடைபெற்ற அறையில் குவிந்ததனர்.