மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து குன்னூர் அருகே உள்ள ஆதிவாசிக் கிராமங்களில் நக்ஸல் தடுப்பு போலீஸார் தீவிர ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதையடுத்து, அதன் எல்லைப்பகுதியான கூடலூர், மஞ்சூர், முள்ளி ஆகிய பகுதிகளில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில், காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நக்ஸல் தடுப்பு போலீஸார், குன்னூர் அருகேயுள்ள லேம்ஸ் ராக், கரன்சி வழியாக கோழிக்கரை ஆதிவாசிகள் கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீலகிரியின் முகப்பு வாயிலான பர்லியாறு வந்த இந்த வீரர்கள், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் நக்ஸல் தடுப்புப் பிரிவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்களைக் கேட்டுக் கொண்டனர்.
மேலும், வனப் பகுதி வழியாக பழக்கமில்லாத நபர்கள் வந்து உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை கேட்டால் கொடுக்க கூடாதென்றும், ஆதிவாசி மக்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த திடீர் சோதனையால் ஆதிவாசி கிராமங்களில் பரபரப்பு காணப்பட்டது.