மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.
சட்டப்பேரவையில் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை (ஜூன் 24) தாக்கல் செய்தார்.
அதன் விவரம்: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் காலம் தேவைப்படும்.
பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் 6 மாதங்களுக்கு...இந்தக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் மேலும் 6 மாதங்களுக்கு தனி அலுவலர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்களைத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதவிக்கால நீட்டிப்புக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினரும், விஜயதரணி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.