வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை உயர்வு
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5,000 இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5,000 இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத வங்கிக் கணக்குகளில் ரூ. 50 முதல் 100 வரை அபராதம் வசூலிக்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, பெரு நகரங்களில் ரூ. 5 ஆயிரம், சிறிய நகரங்களில் ரூ. 3 ஆயிரம், கிராமங்களில் ரூ. 1,000 இருப்புத் தொகை இருக்க வேண்டும். மேலும், ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களிடம் ரூ. 50 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வாடிக்கையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அனைவரும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டும். வங்கிகளின் மூலமே அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் எனப்படும், இருப்புத் தொகை இல்லாத கணக்குகளையும் மத்திய அரசு தொடங்கியது.
இந்த நிலையில், 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 அபராதம், வங்கியில் இருப்புத் தொகை உயர்வு போன்ற அறிவிப்புகளால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், வாடிக்கையாளர்கள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் வங்கிகளில் உள்ள கணக்குகளை முடித்துக் கொண்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் எந்த வங்கியில் அறிவிப்புகள் உள்ளதோ அந்த வங்கியில் புதிதாக கணக்குகளை தொடங்கிக் கொள்ளலாம் என சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.